அரசு
பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனங்களை ஏற்கனவே உள்ள மாநில வேலைவாய்ப்பு
அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என வேலையில்லா
பி.எட்.பட்டதாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசு
பள்ளிகளில் 5,869 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 15,525 பட்டதாரி
ஆசிரியர்கள், 7,907 இடைநிலை ஆசிரியர்கள் உட்பட 57 ஆயிரம் பேர்களை நியமனம்
செய்ய இருக்கிறது. அதிகப்படியான ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைநிலை
ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பி.எட். படித்து அரசு வேலைவாய்ப்பு
அலுவலகங்களில் பதிவு செய்த பட்டதாரிகளும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
மேற்கண்ட ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் சென்ற ஆட்சியின் போது
வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமையின் படிதான் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும்
வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யும் போது
எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெற வாய்ப்பு கிடையாது. இதனையெல்லாம்
தவிர்த்து தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டால் எண்ணற்ற பயிற்சி
வகுப்புகள் புற்றீசல்கள் போல் தோன்றி பட்டதாரிகளிடம் கொள்ளை லாபம்
சம்பாதிக்க வாய்ப்பும், இதனை பயன்படுத்தி பி.எட். கல்லூரிகள் நடத்தும்
தனியார் நிறுவனங்கள் மாணவர்கள் சேர்க்கைக்கு அதிகப்படியான பணத்தை
பிடுங்கும் அவல நிலைகள் தொடரும்.மேலும் எந்தவிதமான அனுபவமும், திறமையில்லாத
பி.எட். படித்தவுடன் வெளியேறும் பட்டதாரிகளே அதிகமாக தேர்வு செய்யப்படும்
நிலை ஏற்படும். இதனால் வகுப்பறையில் நன்றாக பாடம் நடத்த முடியாத பரிதாப
நிலை தான் ஏற்படும். எனவே திறமையான அனைத்து வகையான பண்புகளையும் பயிற்சி
முறைகளையும் பெற்றுள்ள ஆசிரியர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்.எனவே
படித்து முடித்து 10,15 ஆண்டுகளாக வேலையில்லாமல் இருக்கும் பி.எட்.
படித்தவர்களை வேலைவாய்ப்பு பதிவுமூப்பு முறையில் பணி நியமனம் செய்யப்பட
வேண்டும் என அரசுக்கு வேலையில்லா பி.எட்.பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.